முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள பெண் சிங்கம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டில் நடந்தது.
உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் பெண் சிங்கம் படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பாலிஸ்ரீரங்கம் இயக்கும் இப்படத்துக்கான இறுதி கட்டப் படப்பிடிப்பு முதல்வர் கருணாநிதி வாழ்ந்த திருக்குவளை வீட்டில் நடந்தது. அவர் படித்த பள்ளிக்கூடம் மற்றும் திருக்குவளை தெருக்களிலும் படப்பிடிப்பு நடந்தது. அவ்வூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
படப்பிடிப்பு முடிந்ததும் திருக்குவளையில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கபட்டன. நிகழ்ச்சியில் இயக்குனர் பாலி ஸ்ரீரங்கம், ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் ஜெயமுருகன், தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரைவில் திரைக்கு வருகிறது பெண் சிங்கம்.