பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் நடித்த `பிரின்ஸ்` என்ற இந்தி படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி சென்னை வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“பிரின்ஸ், அதிநவீன தொழில்நுட்பங்களுடன், `ஹாலிவுட்` படங்களுக்கு நிகராக தயாராகி இருக்கிறது. இது, ஞாபகசக்தியை இழந்த ஒரு இளைஞனின் கதை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும்படி இருக்கும். படத்தில் 3 கதாநாயகிகள் இருக்கிறார்கள். கதைப்படி, மூன்று பேருமே என்னை காதலிக்கிறார்கள்.
இந்த படத்தின் சண்டை காட்சிகளில், `டூப்` போடவில்லை. நானேதான் நடித்தேன். 34-வது மாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குதிக்கிற காட்சியில், நானே துணிச்சலுடன் நடித்தேன்`` என்றார்.
அவர் மேலும் பேசும்போது, “நிஜவாழ்க்கையில் நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயார் சென்னையில்தான் வசிக்கிறார். நான் சென்னையில்தான் பிறந்தேன். எனக்கு இதுவரை ஒரு `கேர்ள் ப்ரெண்ட்`கூட இல்லை. என் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு வரப் போகிற பெண்ணுக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். எனக்கு சமூக சேவையில் ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாடு, என்னை திருமணம் செய்துகொள்கிற பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.
நான் சமூக சேவைக்காக அமைப்பொன்றைத் துவக்கியுள்ளேன். அந்த அமைப்பின் பெயர், `தேவி.` பெண் சிசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிரான அமைப்பு இது. இந்த இயக்கம் சார்பில் 1200 பெண் குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறேன். அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது போல், இலவசமாக கல்வியும் கற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பை நடத்தி வருவதற்காக பெருமைப்படுகிறேன்..” என்றார்.
விவேக் ஓபராய் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா சுவாமிகளின் தீவிர பக்தர் என்பதால் சாமியார் பற்றிய கேள்விகள் நிருபர்களிடம் இருந்து சராமரியாக பறந்தது. அனைத்திற்கும் பொறுமையாகவே பதில் அளித்தார் விவேக்.
“நான் நித்யானந்தா சாமிகளின் ஆசிரமத்துக்கு சென்றது உண்மை. கோவிலுக்கோ, அல்லது கிறிஸ்தவ தேவாலயத்துக்கோ, அல்லது மசூதிக்கோ செல்வது மன அமைதிக்காகத்தான். அப்படித்தான் நான் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றேன். சமீபத்தில் அங்கு எழுந்த பிரச்சினை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அப்படி சொன்னால், அதை அரசியல் ஆக்கிவிடுவார்கள்” என்றார்.
“போலி சாமியார்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று நிருபர்கள் கேட்க.. “ஒருவர் போலியா, இல்லையா? என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. நாம் ஒருவரை குற்றம்சாட்டுவதற்கு முன், அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன் நாம் தூய்மையானவர்தானா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்” என்றார் விவேக்.
“பொதுசேவையில் அதிகமாக ஈடுபடும் நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடாது?” என்று நிருபர்கள் கேட்க.. “அரசியல் எனக்கு தெரியாது. அதில் எனக்கு ஆர்வம் இல்லை. அரசியலில் சேர்ந்துதான் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதில் சேராமலும் சேவை செய்ய முடியும்” என்று தெளிவாகவே பதில் சொன்னார்.
“நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கே உள்ள மணிரத்னம், பாலா, கவுதம் மேனன், செல்வராகவன் போன்ற டைரக்டர்கள் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவர்களின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது” என்றார் விவேக்.
“உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகை யார்?” என்ற மிக முக்கியமான கேள்விக்கு, “திரிஷா” என்று பட்டென்று பதில் வந்தது. “ஆயுத எழுத்து` படத்தை பார்த்து அசந்துபோனேன். திரிஷா இப்போது இந்தி பட உலகுக்கு வந்து இருக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
“பிரின்ஸ்` படத்தில் ஒரு முத்த காட்சியை படமாக்கியபோது, 18 `டேக்` எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?” என்று நிருபர்கள் கேட்க.. “சுற்றிலும் படப்பிடிப்பு குழுவினர் 300 பேர் இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணை காமிரா கோணத்துக்கு ஏற்ப முத்தமிடுவது என்றால், அது கஷ்டமான விஷயம்தானே... அந்த முத்தக் காட்சியில் நடித்தபோது கதாநாயகிதான் எனக்கு தைரியம் சொன்னார். அவர் சந்தோஷப்படுகிற மாதிரி அந்த காட்சியில் நான் நடித்து முடித்தேன்`` என்று முத்தாய்ப்பாக பதில் சொல்லி முடித்தார் விவேக் ஓபராய்.