சேலம் நேருகலைய ரங்கத்தில் கடந்த 3 நாட்களாக திருநங்கைகளின் சங்கமம் விழா நடந்து வந்தது. இதில் தமிழகம், ஆந்திரம், கேரளா, மும்பை உள்பட பல மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். அனைவரும் விதவிதமான உடை அணிந்து நடந்து வந்து வியக்க வைத்தனர். பின்னர் இவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் பதில் கூறினர்.
இவர்களில் மிஸ் இந்தியா 2010 ஆக கேரளாவை சேர்ந்த சபீதா (வயது 37) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நடிகை சினேகா கிரிடம் வைத்து நினைவு பரிசு வழங்கினார். 2 வது இடத்தை சேலம் மணிமேகலையும், 3ஆம் இடத்தை ரமயாவும் பிடித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகை சினேகா கூறியதாவது,
எனக்கு திருநங்கைகளை பிடிக்கும். நான் சிறுமியாக இருந்த போது எனது தாயார் திருநங்கைகளை அழைத்து திருஷ்டி சுற்றி போடுவார்கள். நான் மும்பையில் பிறந்தவள். அங்கு திருநங்கைகளை அழைத்து வந்து உபசரிப்பார்கள்.
குழந்தைகள் பிறந்தால் திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி வாங்குவார்கள். திருநங்கைகள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களது தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். அவர்கள் சமுதாயத்தில் நல்ல பெயரை எடுக்க வேண்டும். அவர்கள் நாம் கேலி பேசாமல் ஊக்கப்படுத்திட வேண்டும். இன்றைய நாளை என்னால் மறக்க முடியாது என்றார்.
விழாவில் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட சபீதா கூறியதாவது:
கேரளாவை சேர்ந்த நான் தற்போது சென்னை நந்தனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். மிஸ் இந்தியா கிடைத்தது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருநங்கைகளாலும் எதையும் சாதிக்க முடியும். இதை நாங்கள் நிரூபித்து வருகிறோம். மற்ற திருநங்கைகளும் தங்களின் தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வியிலும் சிறந்து விளங்க அவர்களை கேட்டு கொள்கிறேன் என்றார்.