கடந்த சில தினங்களாகவே சினிமா விழாக்களில் ஒரே அரசியல் வாசனை! நெல்லைப்பட்டினம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திமுக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். மறுநாளே தமிழ் புத்தாண்டு தினத்தன்று (அரசு மாற்றினாலும், மனசு ஏத்துக்கணுமே) பிலிம் சேம்பரில் நடைபெற்ற காதலாகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. கலந்து கொண்டவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.'டாண்' என்று குறித்த நேரத்தில் 'என்ட்ரி' கொடுத்தார் அழகிரி. வளவளவென்ற பேச்சுக்கும் இடமில்லை அங்கே. மேடை கொள்ளாமல் விஐபிகள் நிறைந்திருந்தாலும், பேச அனுமதித்தது மூவரை மட்டுமே. கவிப்பேரரசு வைரமுத்து, ஆடியோவை பெற்றுக் கொண்ட பல்கலை. துணைவேந்தர் பச்சைமுத்து, மற்றும் அழகிரி மட்டுமே!
"அண்ணன் அழகிரி பழைய பாடல்களை ரசிக்கக்கூடியவர். இசையின் காதலர். என் வீட்டில் இருக்கிற 500 பழைய பாடல்களும் அவர் கொடுத்ததுதான் என்றவர், படத்தின் பாடல்கள் குறித்து பேசும்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹைனாவுக்கும் ஒரு அட்வைஸ் கொடுத்தார். இசையில் மொழி அமுங்கிவிடக் கூடாது. பழைய பாடல்களின் வெற்றி அதில்தான் அடங்கியிருந்தது. நீங்கள் கொஞ்சம் வாத்திய கருவிகளின் ஒலியை குறைத்துக் கொண்டால் நல்லது" என்றார்.
நான் பழைய பாடல்களை ரசிப்பேன் என்று கவிப்பேரரசு சொன்னது உண்மைதான். இப்போது திரையிடப்பட்ட பாடலை கேட்டபின் இனி புதுப்பாடல்களையும் ரசிக்கலாம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறேன் என்ற அமைச்சர் அழகிரி, ரத்ன சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டது கொஞ்சம் ஏமாற்றம்தான்!