விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிக்கும் ராவணன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் சில காட்சிகளும் பாடலும் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி ஆடிட்டோரியத்தில் நேற்று இரவு பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மேடையில் அடர்ந்த மரங்கள் அடங்கிய காடு போன்ற அரங்கு நிர்மாணித்து இருந்தனர். அதில் ஆட்டம் பாட்டமுமாய் நிகழ்ச்சிகள் நடந்தன. விக்ரம் ஒரு பாட்டுக்கு காட்டுவாசி வேடமிட்டு ஆடினார்.
இப்படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலை பாடினார். நிகழ்ச்சிகளை நடிகர் கார்த்திக், நடிகை பிரியாமணி தொகுத்து வழங்கினார்கள். இவ்விருவரும் ராவணன் படத்தில் நடித்துள்ளனர்.
இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள பிரபு, பிருதிவிராஜ் ஆகியோரும் பேசினார்கள்.
விக்ரம் பேசும் போது:-
ராவணன் படம் ராமாயண கதை என்று சொல்ல முடியாது. ராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரம், உள்பட எல்லா புராண கதைகளும் இதில் அடங்கியுள்ளது. காடுகள், மலைகள் என அலைந்து கஷ்டப்பட்டு படத்தை எடுத்துள்ளோம். திரில்லிங் ஆக இருந்தது என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசும் போது இப்படத்துக்காக ஒரே இடத்தில் அமர்ந்து ஆறு பாடல்கள் எழுதினேன். மணிரத்னம் தவம் போல் இப்படத்தை எடுத்துள்ளார். ராவணன் படத்துக்காக மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யாராய் மூவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றார். மணிரத்னம் விழாவில் கலந்து கொண்டார்.
ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது.