இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கைகளால் பெற்றுக் கொண்டார் இசைஞானி இளையராஜா. 7 ந் தேதி டில்லியில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில் இந்த விருதை பெற்றுக்கொண்ட ராஜா, தன்னுடன் விருது பெற்றவர்கள் சார்பாக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இதே போன்றதொரு நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் நடந்தது. அப்போது பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டவர்களுள் முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசைஞானி இளையராஜா பத்மபூஷன் விருது பெற்ற அதே 7 ந் தேதி லண்டனில் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். லண்டன் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவின் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தார்கள் அங்குள்ள மக்கள். ரஹ்மானின் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்களின் கேள்வி பதிலுக்காகவும் நேரம் ஒதுக்கியிருந்தார் இசைப்புயல்.
தமிழகத்திலிருந்து சென்ற இந்த இருபெரும் இமயங்களுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த கவுரவம், ஒட்டுமொத்த தமிழர்களுக்கே கிடைத்த கவுரம்தான்!