ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை வாங்கியிருக்கும் உரிமையாளர்களையும் வாங்கத் துடிக்கும் கோடீஸ்வரர்களையும் பார்க்கும் போது கிரிக்கெட் விளையாட்டு தற்போது வணிகமயமாகிவிட்டதைக் காண முடிகிறது. இதனால் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக ஆரோக்கியமான விமர்சனங்களை அண்மைக்காலமாகக் காணமுடியவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகவிருந்த கிரிக்கெட் விளையாட்டு தற்போது ஆட்டம், பாட்டம், சூதாட்டமாக மாறிவிட்டது. மைதானத்தில் தீர்மானிக்கப்படவேண்டிய வெற்றிதோல்விகள், 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் கேளிக்கை விடுதிகளிலுமே தற்போது தீர்மானிக்கப்படுகின்றன.
சிறந்த அணிகள் படுதோல்விகளை அடைவதும் சாதாரண அணிகள் இமாலய வெற்றிகளைக் குவிப்பதும் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பதும் முகவரியற்ற வீரர்கள் சதம், அரைச்சதமென விளாசுவதையும் பார்த்து இதுவரை காலமும் குழம்பிப் போயிருந்த ரசிகர்கள் இப்போது மிகவும் சர்வசாதாரணமாக "பணத்தை வாங்கிவிட்டார்கள்%27 என்று சொல்லுமளவுக்குக் கிரிக்கெட் விளையாட்டின் புனிதத்தன்மை கெட்டுப்போய்விட்டது. விளையாட்டுக்குள் அரசியலைத் திணிக்கக் கூடாதெனக் கூறிவந்த நிலைமை மாறி இப்போது விளையாட்டே அரசியலாகிவிட்டது. சூதாட்டக்காரர்களுடன் அரசியல்வாதிகளும் இன்று கைகோர்த்துள்ளமையால் கிரிக்கெட் விளையாட்டின் ஆயுட்காலம் குறைவடைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் அணிகளை வாங்கும்நடிகர், நடிகைகளிடம் குவிந்துகிடக்கும் ஆயிரமாயிரம் கோடி ரூபாக்களைப் பார்த்து ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. நடிப்புத்துறைக்கு வந்து சில வருடங்களேயான நடிகைகள் எல்லாம் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடியென பணத்தைக் கொட்டி கிரிக்கெட் அணிகளை வாங்குவது அதைவிட பல மடங்கு கோடிகளை சம்பாதிக்க முடியுமென்ற நம்பிக்கையிலேயே. நடிகைகள் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புபட்ட "அனுசரணை%27 ஒளிபரப்புகள் என அத்தனையிலும் கோடிக்கணக்கான ரூபாக்கள் கைமாறி பெரும் வணிக சூதாட்டமே இடம்பெறுகின்றன.
சாதாரண மக்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் ரசித்து வரும் நிலையில் அதன் பின்னணியில் கறுப்புப்பணங்கள் நிரம்பிய ஒரு சூதாட்ட சாம்ராஜ்யமே கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. சாதாரண மக்களுக்கு விளையாட்டாகத் தெரியும் கிரிக்கெட் பணக்கார முதலாளிகளுக்கும் சூதாட்டக் கும்பல்களுக்கும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது விளையாட்டாகவின்றி கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் சிறந்த வியாபாரமாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் "11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்%27 என்று ஜோர்ஜ் பெர்னார்ட் ஷா கூறியது நினைவுக்கு வருகின்றது.ஆனால், உண்மையில் இன்று கிரிக்கெட் என்பது 11 அதிபுத்திசாலிகள் விளையாடுவதை இலட்சக்கணக்கான முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு கௌரவமான விளையாட்டு இன்று சூதாடிகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதைப் பார்த்துக்கொண்டு விளையாட்டை ரசிப்பதைத் தவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேறுவழியில்லை.
GIF animations generator gifup.com
0 comments:
Post a Comment
வாசித்துவிட்டீர்களா? பிடித்திருக்கா?
பிடிச்சா கொமென்ட் எழுதுங்க. பிறகென்ன வோட்டையும் போட்டுட்டு போங்கோவன் ஏன் யோசிக்கிறியல்.