அதில் இருந்து தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, பின் ஆயுத ரீதியிலான ஈழப் போராட்டம் (அதில் பல அமைப்புக்கள் பங்கு பற்றின) இப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆயுதப் போராட்டம் நடைபெறும் போதே தமிழ் அரசியல் கட்சிகளான TULF, TELO, EPRLF, ACTE ஆகியன இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பு பதிவு செய்யப்படாவிட்டாலும் 09 வருடங்களாக ஓர் அமைப்பாக ஜனநாயக முறையில் செயற்படுகின்றது. இப்போ இவ்வமைப்பில் இருந்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைபினுள் பிளவு என பலரும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருப்பது சரியானதல்ல ஏனெனில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இரண்டாக உடைந்து அதன் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இருக்க செயலாளர் கஜேந்திரகுமார் மட்டும் தனது கட்சியின் பெயரில் தேர்தலில் நின்கின்றார். எனவே இதில் கூட்டமைப்பு பிளவுபட்டது என்பதை விட கூட்டமைப்பின் ஓர் அங்கமாகிய அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பிளவுபட்டது என்பதே மிகச் சரியானதாக இருக்கும். ஓர் அரசியல் கட்சியில் சிலர் சில சில காரணங்கட்காக கட்சியை விட்டு விலகலாம், சில சில காரணங்கட்காக விலக்கப்படலாம். அந்த இடங்கட்கு புதியவர்களைக் கொண்டுவரலாம். இது சாதாரண ஜனநாயக மரப்pல் ஓர் கட்சிக்குள்ளான நடவடிக்கையாகும். இதில் கஜேந்திரகுமார் பிரிந்ததும் தனது கட்சியின் பெயரில் தேர்தலுக்கு நிற்பதும், தனது கட்சியோடு சிலரைச் சேர்த்து புதிய கட்சி அமைப்பதும் அவரது ஜனநாயக உரிமையாகும். அவரது தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களான நிலையில் இக்கட்சி தான் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவிரவும், இவ் அறிக்கை கூறும் சில விடயங்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். 1.தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்ற கொள்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டு விட்டதென்றும் தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்றவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வார்த்தை ஜாலங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டுக்கு அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லை மாறாக இதே வார்த்தைப் பிரயோகங்களையே பயன்படுத்தியுள்ள தமிழ் தேசியத்திற்கான விடுதலை மன்னணி மட்டுமே உண்மையாக தமிழ்த் தேசியத்தை பற்றி நிற்கின்றது என்கின்ற இவ் அறிக்கை எந்த அடிப்படையில் இப் புதிய குழுவின் அதே கலைச் சொற்கள் மட்டும் நேர்மையானது என்பதையும் விளக்கவில்லை. இப் புதிய குழு கூறும் தனித்துவமான இறைமை, தனித்துவமான தேசம் என்பதும் புதிய விடயமல்ல இலங்கைத் தமிழ் மக்களின் சிங்களவர்களது தனித்துவமான இரு தேசங்கள் என்பதை கூட்டமைப்பு தெளிவாகக் கூறியே வருகின்றது. அதேவேளை தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அவர்களது கொள்கை தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று கூறுவதோடு தனித்துவமான தேசம் தனித்துவமான இறைமை என்றும் கூறியுள்ளனர். அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தனித்துவமான இறைமை என்றோர் விடயம் இல்லை. நாட்டின் இறைமை என்பது மக்களிடமே உள்ளது. தமிழ் மக்களிடமும் சேர்ந்து, தமிழ் மக்களின் இறைமை சிங்கள அரசுகளால் மறுக்கப்படுதல் அல்லது உதாசீனப்படுத்தப்படுதல் எனப்தே தமிழ் மக்களின் பிரச்சினையாகும். எனவே தனித்துவமான இறைமை என்பது அர்த்தமற்ற வார்த்தை பிரயோகமாகவே நோக்கப்படவேண்டியுள்ளது. அப்படியானால் பின் ஏன் இரண்டு தேசம் ஒரு நாடு என்கின்றார்கள். இரண்டு தேசங்கள் எவை? ஈழதேசம், சிங்கள தேசம் என்பன இலங்கையில் இருக்கின்ற என்று ஏற்றுக் கொள்ளலாமா? அப்படியானால், இறைமை தேசத்துக்கா? நாட்டுக்கா? உள்ளது. தேசத்திற்கு இருக்குமானால் முழுமையான இறைமையாக இருக்குமா? அல்லது எப்படியான இறைமை இரண்டு தேசங்கட்கும் இருக்கும். இரண்டு தேசமும் சேர்ந்தது நாடானால் அந்த நாட்டின் இறைமை முழுமையாக இருக்கும் இல்லையா? அப்படிப் பார்க்கும் போது நாம் இலங்கையின் இறைமையுள்ள இலங்கையுள் இருக்கின்றோம் இல்லையா? அத்தோடு தனிநாட்டுக்கான குணாம்சங்களை நாம் எமது கோரிக்கையாக வைப்போமானால் பின் ஏன் ஆறாவது திருத்தச் சட்டத்தை அனுசரித்து சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம் செல்ல முயல வேண்டும். யார் சிறீலங்காவின் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார்களோ, அவர்கள் தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தி தமது அரசியலை நடாத்த முடியாது, என்பதுதான் யதார்த்தம். பிரிவினைக்கு நாம் எந்தவிதத்திலும் துணை போகமாட்டோம் என்று தான் அந்த ஆறாவது திருத்தச் சட்டம் கூறுகின்றது. இதை வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தில் இருந்து பாராளுமன்றத்துள் சபாநாயகர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். எனவே நீங்கள் மக்கட்கு உண்மை நிலைமையை விளங்கப்படுத்தாது, உங்கள் கொள்கை - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை விட நல்லது எனக் கூறப்பார்க்கின்றீர்கள். உங்கள் கொள்கையை நீங்கள் அடைய வேண்டமானால் பாராளுமன்றத்திற்கு வெளியான அரசியலே நடாத்த வேண்டும். உதாரணமாக மகாத்மா காந்தி, ஈ.வே.ரா பெரியார், மாட்டின் லூதர் கிங் போன்றோர் போல் அரசியலை மக்கட்குள் கொண்டு செல்ல வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என விரும்பிய நீங்கள் ஏன் பாராளுமன்றம் போய் தமிழர் பிரச்சினை தீர்க்கலாம் என நினைக்கிறீர்கள். சிறீலங்கா அரசுக்கான ஜனாதிபதிக்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்றால், சிறீலங்கா பாராளுமன்றத்தில் என்ன தொடர்பு உண்டு. அது பற்றிய அனுபவம் போதாதா? எனவே உங்கள் உண்மை நிலையை விளக்குவீர்களாக. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் வார்த்தை ஜாலங்கள் என்றால், உங்களை எப்படி நம்பவது? நீங்கள் கூறுவது வார்த்தை ஜாலங்கள் என மற்றவர்கள் கூறுவது பற்றி எனன் கூறவிரும்புகின்றீர்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இங்கு எந்த வார்த்தை ஜாலங்களையும் காணவில்லை. 2. அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 'இலட்சியத்தில் பற்றும், உறுதியும், நம்பிக்கையும், செயற்றிறனும் இல்லாதவர்கள் என்கிறீர்கள். நல்லது உங்களுக்கு இருக்கின்றதா? கடந்த பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் விலகியவர்கள், விலத்தப்பட்டவர்கள் இவர்களில் யார் நீங்கள் கூறும் மேற்கூறிய குணாம்சங்களை உடையவர்கள்? அல்லது வெளி நாடுகளில் யார் அத்தகைய குணாம்சங்களை உடையவர்கள்? நாம் களத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு கதைத்து, அங்கத்தேய நிலைமைக்கேற்ப உதவவேண்டும். அவர்களோடு தொடர்ந்த கலந்துரையாடலை வைத்திருக்கலாம். உங்கள் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத் தலைமையை ஓர் பொம்மைகளாகப் பார்ப்பதாகவே நான் பார்க்கிறேன். அதில் மாற்றம் தேவை. 3. 'மேற்குலகம் எமக்காக சாயும் வேளையில் - புத்த சாதுரியம், இராஜதந்திரம், நேர்மை, துணிவு, உறுதி' என்பன கொண்ட தலைமை வேண்டும் என்று கூறும் போது அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லாதது போலவும் பிரிந்து சென்ற தமிழ்க் காங்கிரசுக்கு இருப்பது போலவும் தெரிகிறது. இதுவரை உங்களுக்கு நல்லதாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போ கசப்பதன் காரணம் தான் என்னவோ? 4. மே மாதம் 19ம் திகதிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் நடக்கவில்லை எனக் கூறுகின்றீர்கள். அவை எவை? இலங்கையில் 19ம் திகதிக்குப் பின் முள்ளிவாய்க்கால் அழிவுடன் தமிழ் மக்களின் வளர்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் பின் தள்ளப்பட்டுவிட்டது. தற்போதைய நிலைமை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டும் என்பதல்ல. உங்கள் பார்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிலர் இப் புதிய வேட்பாளர் பட்டியலில் வராததால் அங்கு ஜனநாயகம் இருக்கவில்லைல என்கிறீர்கள். அக்கட்சியில் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு தான் ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதேபோல் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு தான் தீர்வுத்திட்டம் எழுதப்பட்டது. காங்கிரஸ் தலைவர் அதை ஏற்க்கவில்லை என்பதால் அங்கு ஜனநாயகம் இருக்கவில்லையா? 5. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலரின் சொந்த முடிவுடன் தான் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது என்பது அதன் வரலாற்றைப் பார்க்கும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பல வாரங்களாக இரண்டு வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையினரின் ஆதரவுடனேயே சம்பந்தர் தமது முடிவை வெளிப்படுத்தினார். அது ஓர் ஜனநாயக முடிவே. அது மட்டுமல்ல அம் முடிவு எம் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் முடிவு அத் தேர்தல் முடிவில் இருந்து அறிய முடியும். கஜேந்திரன், வாக்களிக்கப் போகாத வீதத்தினரைக் காட்டி தமக்கு வெற்றி எனக் கூறியதாகப் பார்த்தேன். ஓர் தேர்தலில் வாக்களித்தவர்களைத் தான் பார்ப்பார்கள். வாக்களிக்காதவர்கள் பற்றிப் பார்ப்பதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்யச் சொல்லி சொல்லாததால் கஜேந்திரனின் வாதம் பிழையானது. 6. நீங்கள் கூறும் மாவை, சுரேஷ், சம்பந்தர் ஆகியோர் எதுவும் செய்யாது 2008 - 2009 வரை விடுதலைப் புலிகளை அழியவிட்டு தலைமையை கைப்பற்றக் காத்திருந்தனர் என்று கூறுகின்றீர்கள். உண்மையில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களை விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடுத்தவில்லை. காலப்போக்கில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த கடைசி இரண்டு வருடத்துக்கு மேலாக இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நிலைமைய விளங்கப்படுத்தினார்கள். தொடர்ந்து ஊடகவியலாளர்கட்கு நிலைமைகளை விளங்கப்படுத்தினார்கள். பாராளுமன்றத்தில் நிலைமையை விவாதித்தார்கள். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் எல்லாம் பல தடைவைகள் சென்று விடயங்களை விளங்கப்படுத்தினார்கள். தமிழ் நாட்டில் தொடர்ந்த போராட்டங்கள் நடப்பதற்கான அத்திவாரங்களையிட்டு அங்கு நின்று அவர்களோடு திட்டமிட்டு விடயங்களைக் கவனித்தார்கள். பலதடவை இது சம்பந்தமாக புது டெல்கி சென்று சண்டையை நிற்பாட்டும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்தளவு உதவி கிடைக்கவில்லை என்பது உண்மையே. புலம்பெயர் உலக நாடுகளில் தொடர்ந்த போராட்டம் நடத்தினார்கள். எதிர்பார்த்த விளைவு எதுவும் கிடைக்கவில்லை. மாறாக சிறீலங்காவின் பிரச்சாரம் தான் இந் நாடுகளில் உள்வாங்கப்பட்டுள்ளது. 7. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் மக்களை ஏன் பலமாகப் பார்க்கவில்லை? என்று கூறுவதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புலம் பெயர் தமிழ்த் தலைவர்கள் பல நாடுகளில் இருந்து இக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பாக இருக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் கள நிலைமைக்கேற்ப அவர்கட்கு உதவி செய்து ஜனநாயக வழியில் அங்கு செய்யக் கூடிய விடயங்களை முன்னெடுக்க உதவ வேண்டியது அவசியமாகும். புலம் பெயர் மக்கள் ஈழ மக்களுக்காக நன்கு உதவ வேண்டுமென்பதை தமது தேர்தல் அறிக்கையில் கேட்டுள்ளார்கள். இது ஈழத்தவர்களுடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் தொடர்புடையவர்களாக இருப்பதன் மூலம் எம் ஈழ தேசத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும். தற்போதைய நிலையில் எம் தேசம் 100 வருடங்களுக்கு மேல் பின்நோக்கிப் போய்விட்டது. இதை புலம்பெயர் தமிழர்கள் பெரிய அமைப்புக்களை உருவாக்கி ஈழ தேச விடிவுக்கு தொடர்ந்து உதவ முன்வரவேண்டும். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கேட்கிறது. குறிப்பாக சம்பந்தர், சுரேஸ், மாவை ஆகியோர் புலம்பெயர் தமிழ் மக்களை மதிக்கவில்லை என்பது எந்தவித ஆதாரமும் அற்றதாகும். 8. எப்படியான தீர்வை நாம் கோருகின்றோம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விபரமாக தமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அவர்கள் தற்போதைய நிலையை மனதிற் கொண்டு ஓர் சமஷ்டி ஆட்சியை கோருகின்றார்கள். இது அதிகமான மேற்கு நாடுகளிலும், அமெரிக்கா, இந்திய முறைகளை ஒத்ததாகும். புலம் பெயர் மக்கள் நீண்ட கால திட்டமாக தனிநாடு பற்றி முயற்சிக்கலாம். ஆனால் ஈழத்தில் குறுகிய கால, இடைக்கால தீர்வுகள் தற்சமயம் அவசியமாகும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூர நோக்கற்றது என யாரும் கூறினால் அது அவர்களது தூர நோக்கின்மையே காட்டுகின்றது. 9. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் பல துறைகளைச் சார்ந்தவர்களும் களத்திலும் புலத்திலும் இருந்து பங்கேற்கின்றார்கள் என பத்திரிகைகள் கூறுகின்றன. இது ஈழ நிலைமைக்கேற்ப தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தினால் கவனமாக தெரிவு செய்யப்பட்டதாகவே அறிகிறேன். 10. கடைசியாக கூட்டமைப்பு இடம்பெயர்ந்தோரை அவர்களது முகாம்களில் போய் பார்க்கவில்லை என்பதாகும். அவர்களில் சிலர் போய்ப்பார்ப்பதைப் பற்றி சில செய்திகள் மூலம் அறிந்தோம். ஆனால் பலர் பார்க்கப் போக அனுமதி கொடுக்கப்படவில்லை. இது தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்கள் எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பல விடயங்களை தெரிந்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுந்தரம் தனது கட்டுரை முடிவில் 'சக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சரியாகக் கலந்து பேசாமல், தாயக மக்களின் கருத்தறியாமல், புலத்தில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களோடு சேர்ந்தியங்காமல், அடி மட்டங்களோடு உறவு பேணாமல், பேரழிவை சந்தித்த மக்களுக்காக துயர்துடைப்புப் பணிகளைச் செய்து கொடுக்காமல், தாயக மக்களின் உண்மையான விடுதலையை உளமார நேசிக்காமல், இலட்சியத்தில் உறுதியானவர்களை ஓரம் கட்டும் இந்தத் தலைமையை ஓரம் கட்டுவோம்' என்று கூறுவதைப் பார்த்தால் விலகியவர்கள் மகிந்தவின் கட்சியில் சேர்ந்துள்ளனர், மற்றவர்கள் அடுத்த சிங்கள இடதுசாரியோடு இணைந்துள்ளனர். பிரிந்து புதுக்கட்சி அமைத்த கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி (K.K.P) ஆகியோர் எல்லாம் நீங்கள் மேலே கூறிய வட்டத்துள் வரவில்லையா? 'விடுதலை என்ற பெயரில் மக்களையும் விடுதலையையும் பிரித்து சின்னாபின்னமாக்கும் இந்த SMS அணியினரைத் தோற்கடித்து பலமான ஒரு புது அணியைக் கட்டமைப்போம்' என்று முடிப்பதைப் பார்த்தால் உங்களைப் போன்றவர்களின் உந்துதலால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைக்கப்பட்டதும், புதிய கட்சி உருவானது எனக் கூறினால் அது மிகையாகாது. உங்கள் கட்டுரை முடிவுக்கும் மேலான வடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துள்ளது. தாயகத்தில் இராது வெளியே இருந்து எதையும் எழுதலாம். களத்தில் இருந்து எழுதினால் நிலைமை மாறலாம். வாக்காளப் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை தோற்கப் போகும் வேட்பாளர்கட்கு அளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைத்துவிடாதீர்கள் இப்போ எமக்கான பலம் அவர்கள் தான் நன்றி. |